சட்டவிரோத நடவடிக்கை கூடாது… கிரஷர் மற்றும் குவாரி சங்கங்களுக்கு புது கட்டுப்பாடு ; கோவையில் நடந்த கூட்டத்தில் முடிவு
Author: Babu Lakshmanan31 August 2023, 6:28 pm
கோவை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள கிரஷர் மற்றும் குவாரி சங்கங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கோவையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தின் தலைவர் சந்திர பிரகாஷ் கூறியதாவது :- கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் கிரஷர் மற்றும் குவாரி சங்கங்களின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, பெரம்பலூர், நாமக்கல், சேலம் உள்ளிடடட 7 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாநில செயலாளர் ஜெயராமன் எழுச்சியுரையாற்றினார். நமது தொழிலை பலர் அவதூறாக பேசி வரும் நிலையில், அதனை சீர்செய்யும் வகையில், நமது தொழிலை தூய்மைப்படுத்த வேண்டி உள்ளது. எனவே, கிரஷர் மற்றும் குவாரி சங்கங்கள், தமிழக அரசு மற்றும் கனிம வளத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் அரசு குவாரிகளிலும் முறைப்படி அனுமதி பெற்றே கற்களை எடுக்க வேண்டும். சட்டவிரோத செயல்களில் நிர்வாகிகள் ஈடுபட்டால், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட சங்கமே கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அரசு குவாரிகள் தான் உள்ளது என்றாலும், அதிலும் அரசின் அனுமதி பெற்று, சட்டப்படியே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆணையர் நிர்மல் ராஜ், அந்தந்த மாவட்ட AD Mines அவர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம். சட்டவிரோதமாக செயல்பட்டு வருபவர்கள் அவர்களின் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை வெளியே எடுத்து விட்டு, ஒரு கல்லை கூட உடைக்கக் கூடாது, மீறினால் சிறைக்கும் செல்லுவீர்கள்.
அமைச்சர் பொன்முடி சட்டவிரோதமாக கனிமவளங்களை கொள்ளையடித்த வழக்கு இருக்கு. அமைச்சர் பதவியில் இருக்கும் அவராலயே எதுவும் செய்ய முடியல. பாமர தொழிலதிபர்களால் எதுவும் பண்ண முடியாது என்பதை புரிந்து கொண்டு, சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் போல, சங்கமே நடவடிக்கை எடுக்கும் என்று மாநில செயலாளர் ஜெயராமன் கூறியுள்ளார்.
எனவே, சட்டவிரோத கனிமவளங்களை எடுக்கக் கூடாது அல்லது யாரேனும் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டாலோ, இது தொடர்பான தகவலை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டு வரவேண்டும், எனக் கூறினார்.