சீட் பிடிப்பதில் மோதல்.. சக மாணவர்களால் 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. சேலத்தில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan11 February 2025, 2:44 pm
சேலத்தில், பள்ளிப் பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கிய நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார்.
சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இந்தப் பள்ளிக்கு பேருந்துகளும் உள்ளன.
இந்த பேருந்தில் மாணவர்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து மாலை வீடு திரும்புவதற்காக, பள்ளி பேருந்துகள் தயார் நிலையில் இருந்துள்ளன. அப்போது, அங்கு 9ஆம் வகுப்பு மாணவர்கள் பேருந்தில் ஏற வந்துள்ளனர்.
அப்போது, அவர்களுக்குள் இருக்கை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கந்தகுரு என்ற 9ஆம் வகுப்பு மாணவனின் நெஞ்சில் மற்றொரு மாணவர் ஓங்கி அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் கந்தகுரு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் உடனடியாக எடப்பாடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மாணவிகள் முன் செய்யக்கூடாத செயல்.. அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!
மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், கந்தகுருவை தாக்கிய மாணவர் யார் என்று தெரியவில்லை எனவும், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இனிதான் தெரியவரும் எனவும், இந்தச் சம்பவம் குறித்து தனியார் பள்ளி வாகனத்தில் இருந்த பொறுப்பாளர்கள், ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.