இறந்து போன மனைவிக்காக கோவில் கட்டி வழிபாடு நடத்தும் விவசாயி… நெகிழ்ச்சி சம்பவம்!!!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2023, 10:43 am
கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 77) விவசாயி.இவரது மனைவி சரஸ்வதி (வயது 59). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி பாசத்துடன் நேசத்துடன் வாழ்ந்து வந்தனர்.
சரஸ்வதி தனது கணவரை கண் இமை போல் பாதுகாத்து வந்ததால் கணவர் பழனிசாமி தனது மனைவி மீது உயிரையே வைத்திருந்தார்.

அதனால் கணவன் மனைவி இரண்டு பேரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.ஒரு நாள் கூட அவர்களிடையே சண்டை சச்சரவு ஏற்பட்டது இல்லை என தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 21/1/2019 ஆண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சரஸ்வதி குளியல் அறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சியை பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறி அழுத அவர் தனது மனைவியின் உடலை தோட்டத்திலேயே அடக்கம் செய்து மறைந்த தனது மனைவியின் நினைவுடனே கண்ணீர் சிந்தி தினசரி வாழ்ந்து வந்தார்.
தினசரி மனைவியை நினைத்து கண்ணீர் சிந்தி வந்த பழனிசாமிக்கு தனது மனைவி சரஸ்வதிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
இதனைத் தொடர்ந்து பழனிசாமி தனது மனைவியை அடக்கம் செய்த இடத்தில் நினைவு மண்டபம் அமைத்து மனைவி சரஸ்வதியின் திருவுருவச் சிலையை தனது மனைவி இறந்த ஓராண்டுக்கு பின்னர் நிறுவினார்.
விவசாயி பழனிச்சாமி தனது மனைவியின் திருவுருவச்சிலைக்கு தினசரி மாலை இரண்டு வேளையும் தீபம் ஏற்றி ஊதுபத்தி கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.
எங்காவது வெளியூர் சென்றால் பூஜை செய்வது தவறிவிடும் என்ற எண்ணத்தில் வெளியே எங்கும் செல்லாமல் தனது தோட்டத்திலேயே தனது மனைவியை நினைத்து கண்ணீர் சிந்தி வாழ் நாளை கழித்து வருகிறார்.
இன்றைய காலகட்டத்தில் துக்க சம்பவம் நடந்து 3 நாள்,16 நாள் காரியங்கள் நடந்து முடிந்த பின்னர் அனைத்தையும் மறந்து விடும் காலகட்டத்தில் விவசாயி பழனிசாமியால் தனது மனைவி இறந்த பின்னரும் மிகவும் மனைவியை மறக்க முடியாமல் சோகத்துடனே வாழ்ந்து வந்தார்.
இது குறித்து விவசாயி பழனிசாமி கூறியதாவது திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இரண்டு பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.
ஒரு நாள் கூட எங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்ட வில்லை எனவும் என்னை நல்ல முறையில் கவனித்து வந்தார். இரண்டு பேரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வேலையில் திடீரென அவர் உயிரிழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது நினைவால் நினைவு மண்டபம் அமைத்து அதில் அவரது திருவுருவச் சிலையை வைத்து காலை,மாலை இரண்டு வேலையும் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன்.
இதற்காக திருமுருகன் பூண்டியில் உள்ள ஒரு சிற்ப கலைக்கூடத்தில் அவரது போட்டோவை கொடுத்து அவரைப் போலவே தத்ரூபமாக எனது மனைவியின் உருவச் சிலையை சிற்பமாக வண்ணம் தீட்டி வடிவமைத்துள்ளனர்.
மனைவி இறந்த பின்பு அவரது நினைவுகளுடன் வாழ்வதைவிட ஒவ்வொருவரும் மனைவி தன்னுடன் வாழும் போது அவரை உயிருக்கு உயிராக அன்புடன் நேசித்து பாசம் செலுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று கண்ணீர் சிந்தி உருக்கமுடன் கூறினார்.