அதெப்படி அவன் மட்டும்.. ஊரே சேர்ந்து ஒருவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூரம்! காரணம் இதுவா?
Author: Hariharasudhan22 March 2025, 5:49 pm
ஊருக்கே செய்வினை வைத்து பொருளாதார ரீதியில் பின்னுக்குத் தள்ளியதாக ஊரே சேர்ந்து ஒருவரை பெட்ரோல் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், அரக்கு மலை பகுதியில் உள்ளது தொம்புரிகுடா என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாந்திரீக பூஜைகள் செய்து வந்துள்ளார். இந்த தொம்புரிகுடா கிராமத்தில் மொத்தம் 15 வீடுகள் உள்ளன.
இவற்றில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்க, அடாரி தொம்புரு குடும்பமே காரணம் என மக்கள் நினைத்து அவர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். அதேநேரம், அடாரி தொம்புரு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டே இருந்துள்ளார்.
ஏற்கனவே அடாரி தொம்புரு மாந்தீரிக வேலையைச் செய்து வருவதால், மொத்த கிராமத்துக்கும் செய்வினை வைத்துவிட்டு, தன்னை மட்டும் பொருளாதாரத்தில் மேம்படுத்தி, மற்றவர்களை தன்வசப்படுத்தி, அதன் மூலம் மேலும் வசதியாக அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கருதியுள்ளனர்.
இந்த நிலையில், அடாரி தொம்புருவை கிராம மக்கள் சேர்ந்து, வீட்டுக்கு வெளியே தரதரவென இழுத்து வந்துள்ளனர். பின்னர், கற்கள், கட்டைகளால் தாக்கியுள்ளனர். பிறகு, கொடூரத்தின் உச்சமாக அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளனர். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: என்கிட்ட நிறைய பேர் தப்பா நடந்திருக்காங்க.. கதறி அழுத வரலட்சுமி சரத்குமார்!
எனவே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த ஊரைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு மாந்திரீக பூஜை செய்து வந்த நபரால்தான் தாங்கள் கஷ்டங்களை அனுபவிப்பதாகக் கருதி, அந்த நபரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.