கொரியர் கொடுப்பது போல நடித்து வீட்டில் இருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து : கோவையில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 8:31 am

கோவையில் கொரியர் கொடுப்பது போன்று வந்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கோவைபுதூர் தில்லை நகரில் வசித்து வருபவர் மோதிலால். மென்பொறியாளராக பணியாற்றி வரும் இவரது மனைவி சங்கீதா (40) ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

இந்நிலையில், வீட்டிற்கு வெளியே சென்று சற்று நகர்ந்து போய் கொரியர் வாங்க சென்றுள்ளார். கொரியர் பெற்ற அடுத்த வினாடியே, கொரியர் கொடுத்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கீதாவின் தோள்பட்டையில் குத்தி தப்பியோடினார்.

ரத்த வெள்ளத்துடன் வீட்டருகே வந்த சங்கீதா மயக்கமடைந்ததை கண்ட அக்கப்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிலம்பரசன், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். முதலில், நகை பறிப்பில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாக தகவல் பரவிய நிலையில், பின் சங்கீதாவை தாக்கவே திட்டமிட்டு இந்த சம்பவத்தை நடத்தியதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து, கையில் கிளவுஸ் அணிந்து வந்ததாகவும், அந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பகுதியில் உள்ள வாட்ச்மேன் ஒருவரிடம் போன் வாங்கி, சங்கீதாவை அழைத்து, தெருவில் நாய்கள் உள்ளதாகவும் வீடு அமைந்துள்ள தெருவின் கார்னருக்கு வரும்படி கூறி, கொரியர் வாங்கியவுடன் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.

எதற்காக சங்கீதா தாக்கப்பட்டார், தான் எந்தவிதத்திலும் காவல்துறையால் பிடிபட்டு விடக்கூடாது என்பதற்காக வேறொருவரின் செல்போன் மூலம் சங்கீதாவை அழைத்தது மூலம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் குனியமுத்தூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்