லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் திணறிய குமரி… ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 8:41 am

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் லட்சக்கணக்கானோர் குவிந்து மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் புனித நீராடி வருகின்றனர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் மறைந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும். குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கையை இந்துக்களிடையே உள்ளது.

அந்தவகையில், லட்சுமி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்களை இயற்கையாகவே கொண்ட முக்கடல் சங்கமமான கன்னியாகுமரியில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து லட்சக்கணக்கானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர்.

இங்குள்ள போத்திகள் மற்றும் வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க எள், பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முக்கடல் சங்கமத்தில் புனித நீராடியவர்கள் பின்னர் இங்குள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அம்மாவாசையையொட்டி கன்னியாகுமரியில் காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான கமலாலய திருக்குளத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தால் மோட்சம் கிடைக்கும் என்கிற ஐதீகத்தை தொடர்ந்து ஏராளமான தர்ப்பணம் வழங்கினர்.

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்த நிலையில், இன்று அதிக அளவில் மக்கள் தர்ப்பணம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு பணியில் ஏறாளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!