எஸ்பிஐ, எல்ஐசி பல கோடி இழக்க காரணம் அதானி : ஆதாரங்களுடன் புகார் கூறிய கேஎஸ் அழகிரி!!
Author: Udayachandran RadhaKrishnan19 February 2023, 4:22 pm
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஈரோட்டில் மகத்தான வெற்றி பெறுவோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இருப்பது போல் தெரியவில்லை. அவர்கள் தனித்தனியாகத் தான் இருக்கின்றார்கள்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கின்றார். நாடு விழுந்திருக்கின்றது. அது தான் தற்போது நடந்திருக்கின்றது. பொது மக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் எல்ஐசி நிறுவனம் சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி தொகையை இழந்திருக்கின்றார்கள்.
அவர்களை, அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல், முறைகேடு அமெரிக்கா வரை பரவியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி வாய் திறந்து பதில் சொல்ல வில்லை.
நிதியமைச்சரும் தெளிவான பதிலைச் சொல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்குப் பதில் கூறாமல், காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளது என கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.