தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை…!
Author: kavin kumar17 February 2022, 4:55 pm
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தெற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) ஐ.ஏ.எஸ். அதிகாரியான எச்.எஸ். ஸ்ரீகாந்த் பணியாற்றி வருகிறார். இவரது வீடு புதுக்கோட்டை சாலையிலுள்ள அலுவலர்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ளது. இவரது கார் ஓட்டுநராகக் கூட்டுறவு காலனியை சேர்ந்த ராஜசேகர் (35) பணியாற்றி வந்தார். இவருக்குக் கூடுதல் ஆட்சியரின் வீட்டு மாடியில் தங்கிக் கொள்வதற்காகத் தனியாக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தற்போது தேர்தல் பார்வையாளராகத் திருநெல்வேலியில் ஏறத்தாழ 10 நாட்களாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கூடுதல் ஆட்சியரின் வீட்டு மாடியிலுள்ள அறையில் ராஜசேகர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனை கண்ட காவலாளி இது குறித்து தெற்கு காவல் நிலையத்திற்கு தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற் கூறாய்வுக்காகத் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தெற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.