சால்வை அணிவிப்பதில் குளறுபடி… தேசிய கீதத்தை அவமதித்து திமுக – அதிமுகவினர் மோதல்.. அரசு நிகழ்ச்சியில் சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
7 August 2023, 1:44 pm

கல்பாக்கம் அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அதிமுக, திமுகவினர் தேசிய கீதத்தை அவமதித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள் அதிருப்தியடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு 122 மிதி வண்டிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பள்ளியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை அமைதிப்படுத்தும் விதமாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனையும், பொருட்படுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தேசிய கீதத்தை அவமதிப்பு செய்யும் விதமாக, இவர்கள் செய்த செயல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!