வினை தீர்க்கும் விநாயகர் : 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக கொண்டாடப்படும் சதுர்த்தி விழா… 10 ஆயிரம் போலீசார் குவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan31 August 2022, 10:11 am
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால், விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டவில்லை. தனி நபர்கள் தங்களின் வீடுகளில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது தடைகள் நீங்கியுள்ளன. ஹிந்து அமைப்பினர், தங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகளை நிறுவி, ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 சிலைகள் வைக்கப்பட உள்ளன.