திருவிழா முடிந்த பின்னர் மாயமான அம்மன் சிலை… தேடிச் சென்ற ஊர் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2023, 2:31 pm

திண்டுக்கல் அருகே உள்ள அகரம் பேரூராட்சி சத்திரப்பட்டியில் கடந்த மாதம் 14, 15 ஆம் தேதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
திருவிழா முடிந்து 16-ம் தேதி முத்தாலம்மன் சாமி சிலையை பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலத்துடன் எடுத்துச் சென்று அருகே உள்ள பூஞ்சோலையில் வைத்தனர்.

பூஞ்சோலையில் வைக்கப்படும் அம்மன் சிலை மழை பெய்யும்போது கரையும். இந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த முத்தாலம்மன் சிலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று திடீரென்று மாயமானது.

இதனை அறிந்த ஊர் பொதுமக்களும் முக்கியஸ்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சாமி சிலை காணாமல் போனதால் தங்கள் கிராமத்திற்கு கெடுதல் நடந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே சாமி சிலையை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாமி சிலை வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி ஆற்று தடுப்பணையில் கிடப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ஊர் மக்கள் லட்சுமணன்பட்டி தடுப்பணையில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.

இதனை அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் சத்திரப்பட்டி பூஞ்சோலையில் இருந்த சாமி சிலையை தூக்கி வந்து லட்சுமணன்பட்டி தடுப்பணையில் வீசி சென்றது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சத்திரப்பட்டி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்து சாமி சிலையை தூக்கி வந்து ஆற்றுக்குள் வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!