அதிமுக முன்னாள் அமைச்சர் கைது? வீட்டு முன் குவிந்த அதிமுகவினரிடம் சி.வி.சண்முகம் வேண்டுகோள் : திண்டிவனத்தில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 12:51 pm

விழுப்புரம் : திண்டிவனத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து நள்ளிரவில் அவரது வீட்டின் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மொட்டையன் தெருவில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்தும், தமிழக அரசு குறித்தும் விமர்சனம் செய்து பேசி வருகின்றார்.

இந்நிலையில் நேற்று, காலையில் விழுப்புத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் சென்னைக்குப் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை போலீசார் கைது செய்ய உள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பல்வேறு பகுதியில் இருந்து வந்து அவரது வீட்டின் முன்பு குவிந்தனர் .

இதனால் சிவி சண்முகம் வீடு உள்ள பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நள்ளிரவில் சென்னையில் இருந்து திண்டிவனம் வீட்டிற்கு வந்த சி.வி.சண்முகம் அங்கிருந்த கட்சியினரிடம் கைது செய்தாலும் பரவாயில்லை, என்றாவது ஒருநாள் கைது செய்யத்தான் போகிறார்கள் எனவே அனைவரும் அவரவர் வீட்டுக்கு செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து அங்கிருந்த கட்சி தொண்டர்கள் கலைந்து சென்றனர். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் போலிசாரால் கைது செய்யப்படலாம் என்ற தகவலால் சிவி சண்முகம் வீட்டின் முன்பு நள்ளிரவில் 200 -க்கும் மேற்ப்பட்ட கட்சித் தொண்டர்கள் குவிந்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ