விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!
Author: Hariharasudhan29 March 2025, 3:17 pm
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லி: நேற்று (மார்ச் 28) டெல்லியில் நடைபெற்ற, டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2025இல் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்களை முன்வைத்தார். அதோடு, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமையுமா? என்பது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். இதனால், அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைக்கும் என்பது திட்டவட்டமாகியுள்ளதாக அரசியல் மேடையில் பேசப்படுகிறது.
முன்னதாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக, 2024 தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணியை முறித்துக்கொண்டு, தனித்தனியாக களம் கண்டது. இருப்பினும், இருதரப்புக்கும் படுதோல்வியே மிஞ்சியது. இதனால், அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்தது.

ஆனால், மீண்டும் மீண்டும் பாஜக உடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்து வந்த அதிமுக பொதுச் செயலாளரும், பிரதான எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இடையே மாலை நேரத்தில் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்த்த அவர், பின்னர் மாலையில் தம்பிதுரை, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார். ஆனால், தமிழக மக்களின் பிரச்னைகளைப் பேசவே அமித்ஷாவைச் சந்தித்தாகக் கூறிய இபிஎஸ், சூழ்நிலை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கூட்டணி அமையும் என்ற அக்கணத்தையும் வைத்தார்.
இதையும் படிங்க: ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!
அது மட்டுமல்லாமல், அதிமுகவுக்கு திமுக மட்டுமே எதிரி என்றும் ஆணித்தரமாகக் கூறினார். இதனால், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறினர். இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்றார். இதனால், கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இருப்பினும், மதுரை வழியாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளதாக வெளியான தகவல் அதிமுகவில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்தான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல் சென்றதும் நினைவுகூரத்தக்கது.