நாடாளுமன்றம் சென்றாலும் கண்ணீர் மட்டுமே விடுவார் துரை வைகோ ; அவருக்கு கொஞ்சமும் மன தைரியம் கிடையாது ; பாஜக கூட்டணி வேட்பாளர்!!

Author: Babu Lakshmanan
27 March 2024, 10:10 pm

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் திரு துரை வைகோவிற்கு மன தைரியம் என்பது கிடையாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்நாதன் கூறியதாவது :- பணத்தைக் கொடுத்து வாக்களிக்கும் முறையை நாங்கள் கையில் எடுக்கவில்லை. பணம் கொடுத்து வாக்குகளை பெற்றவர்கள் அவர்களுக்கு அந்த பணம் எப்படி வந்திருக்கும் என்பது நாடறிந்த உண்மை. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டாலும் எங்களுடைய வெற்றி உறுதி.

இதுவரை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. நான் வெற்றி பெற்றால் பொதுமக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வேன். மேலும், மத்தியில் மோடி அரசு தான் அமையும். எனவே பொது மக்களின் நலத்திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவதில் எந்தவித சிரமமும் இருக்காது.

துரை வைகோவிற்கு மன தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லை, திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் நான் வாக்கு அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லை, வலுக்கட்டாயமாக தான் நான் வந்துள்ளேன் என்று கூறியும் கண்ணீர் விட்டும் அழுது புலம்பியுள்ளார். இது அவரது தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் இல்லாததை காட்டுகிறது. இவர் நாடாளுமன்றத்துக்கு சென்றால் கண்ணீர் தான் விடுவார், தேவைகளை பூர்த்தி செய்ய மாட்டார். தேசியமும் தெய்வீகமும் தான் எங்களுடைய தாரகை மந்திரம். அதுதான் பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார், எனக் கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!