புதிய கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தவறான தகவல்: மத்திய அமைச்சர் மீது தமிழக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு..!
Author: Vignesh7 November 2022, 12:09 pm
திருச்சி: புதிய கல்வி கொள்கை குறித்து தமிழகத்தின் நிலைபாடு குறித்து மத்திய கல்வி இணை அமைச்சர் பொய்யான தகவல்களை பரப்பி சென்றுள்ளார் என அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.
திருச்சி எஸ்.ஐ. டி கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, புதிய கல்வி கொள்கை குறித்து தமிழகத்தின் நிலைபாடு குறித்து மத்திய கல்வி இணை அமைச்சர் பொய்யான தகவல்களை தமிழகத்துக்கு வந்து பரப்பி சென்றுள்ளார்.

எனது தொகுதிகளும் திருச்சியில் வந்து புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றுவதாக தவறான தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை பின்பற்றவில்லை யாரோ தவறான தகவலை அவருக்கு கொடுத்துள்ளனர்.
மத்திய கல்வி இணையமைச்சர் சரியாக படித்து பார்க்கவில்லை என எண்ணுகிறேன். அவர் சரியாக படித்து பார்த்தால் தெரியும் – அவர் கூறுவது போல் எதுவும் இல்லை.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் இடியும் நிலையில் உள்ள பள்ளி மதில்சுவர்கள் கட்டிடங்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அதில் மாணவர்களை அமர வைத்து கல்வி கற்பிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.
போட்டி தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் அரசு துறைகளில் பணியாற்றுவது போன்ற பல போட்டி தேர்வுகளுக்கு அவர்களை தயார் படுத்துவது கட்டாயம் என்பதால் பயிற்சி தருகிறோம்.
ஏழை மாணவர்கள் பலன் அடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் அரசு சார்பில் இந்த ஏற்பாடு என தெரிவித்தார். நீட் தேர்வை பொறுத்தவரை ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் ஒன்று சேர்ந்துதான் சட்ட மசோதவை அனுப்பி வைத்தோம்.
அரியமங்கலம் பால்பண்ணை துவாக்குடி வரையிலான அணுகு சாலை அமைப்பதற்காக கடந்த ஐந்தாண்டுகளாக போராடி வருகிறோம், தலைமைச் செயலகத்தில் வரும் திங்கட்கிழமை அதற்கான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் சாலை திட்டத்திற்கான வரைவு செய்யப்பட்டு நிலையில், அணுகுசாலைக்காக பறக்கும் சாலையை தவிர்ப்பதும், பறக்கும் சாலைக்காக அணுகு சாலையை தவிர்ப்பதும் இருக்காது. அணுகு அமைப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என தெரிவித்தார்.