அப்பவே அதிமுக செய்திருந்தால்.. அண்ணா பல்கலை., சம்பவமே நடந்திருக்காது.. கைகாட்டும் கனிமொழி எம்பி!
Author: Udayachandran RadhaKrishnan28 December 2024, 2:41 pm
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற முதியோர்கள் தங்கும் வகையில் சுமார் 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது இந்த முதியோர் இல்லத்தை தூத்துக்குடி எம்பி கனிமொழி திறந்து வைத்தார்..
இதைத் தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட சம்பவங்கள் நடைபெறக்கூடாது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல்வர் எந்த பாரபட்சமும் இன்றி குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அவர் (ஞானசேகரன்) மீது ஒரு குற்றச்செயல் நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் எஃப் ஐ ஆர் ஐ மறைத்துள்ளனர். பாலியல் தொல்லை தந்ததோடு மட்டுமில்லாமல் தங்க சங்கிலியையும் அந்த குற்றவாளி பறித்துள்ளார். ஆனால் அதை சங்கிலி பறிப்பு வழக்காக மட்டும் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிக்கு அன்றே சரியான தண்டனை விதித்திருந்தால். ஒரு கண்காணிப்பாவது இருந்திருக்கும். அப்போது அவர்கள் கடமையை செய்ய தவறியதால் இது போன்ற ஒரு சம்பவம் நடக்க இன்று காரணமாகிவிட்டது.
இதையும் படியுங்க: FIR வெளியானது எப்படி? கடிந்த ஐகோர்ட்.. பல்கலைக்கு பறந்த உத்தரவு!
இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக படிக்க வரக்கூடிய தமிழகத்தில் எல்லோ பெற்றோர்களும் அச்சப்படுகிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை எடுத்துச் சொல்லும் போது பெண்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கிறது..
முதல்வரும், திமுகவும் பெண்களின் உரிமைக்காகவும் பெண்களின் கல்விக்காகவும், உரிமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது.
பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது. அதனால் தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்….