குர்ஆன் முதல் தக்காளி மாலை வரை… அண்ணாமலை நடைபயணத்தின் போது நிகழ்ந்த சுவாரஸ்யம்..!!
Author: Babu Lakshmanan3 August 2023, 6:51 pm
ஆலங்குடியில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயத்தின் போது பல்வேறு ருசீகர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

மங்களாபுரம் அரிமளம் விளக்குப் பகுதியில் நடைபயணத்தைத் தொடங்கிய அண்ணாமலை, அம்புலி ஆற்றுப் பாலம், சந்தைப்பேட்டை, வடகாடு முக்கம், அரசமரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடந்து சென்று காமராஜர் சிலை அருகே வாகனத்தில் ஏறி உரையாற்றினார்.
இந்த பாத யாத்திரையின் போது அம்புலி ஆற்றுப் பாலத்தின் அருகே பாஜவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் அண்ணாமலைக்கு அரபு எழுத்துகளால் அமைந்த புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவுப் பரிசாக வழங்கினார். வழிநெடுகிலும், மாலை மற்றும் சால்வை அணிவித்து பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும், அண்ணாமலைக்கு பாஜக தொண்டர் ஒருவர் தக்காளி மாலை அணிவிக்க முயன்ற போது, அண்ணாமலை அந்த மாலையை மகளிர் அணிக்கு வழங்குமாறு கூறினார்.
மேலும், ஆலங்குடியைச் சேர்ந்த உறவினர்கள் இல்லாத, வசதி இல்லாதவர்கள் என 55 ஆண்டுகளாக 10,023 உடல்களை அடக்கம் செய்துள்ள சமூக ஆர்வலரான 515 கணேசனின் இரும்புக் கடைக்குச் சென்ற அண்ணாமலை அவரிடம் வாழ்த்துப் பெற்றதோடு, அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாகவும் உறுதி அளித்தார்.