’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!
Author: Hariharasudhan25 February 2025, 12:42 pm
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில், பாஜக சார்பில் 2025 – 2026 மத்திய பட்ஜெட் சாதனை விளக்கம் மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாஜக திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த க்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதனையடுத்து, பொதுக்கூட்டத்தில் பேசிய ராம சீனிவாசன், “புதிய கல்விக் கொள்கையில் மூன்றாவதாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைத்தான் மத்திய அரசு படிக்கச் சொல்கிறது. ஆனால், திமுக இந்தியைத் திணிப்பதாக பொய்யானக் கருத்தைப் பரப்பி வருகிறது.
திமுகவில் உள்ள பிரமுகர்களின் வீட்டுக் குழந்தைகள் இந்தி மொழியை சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் வளர்ந்துவிடக்கூடாது என மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்க்கிறது. இந்த கல்விக் கொள்கை மூலம் வடமாநில மாணவர்கள், தென்மாநில மொழிகளை கற்றுக் கொள்ளலாம்.
தென்மாநில மாணவர்கள், வடமாநில மொழிகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். மொழி என்பது நம்மை இணைக்கும் கருவி. நம்மைப் பிணைக்கும் கருவி. இந்த பிணைக்கும், கருவியைப் பிளக்கும் கருவியாக மாற்ற திமுக முயற்சிக்கிறது, ஆனால் அது நடக்காது.
திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் கூட்டணி நாடகம் போடுகின்றன. கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் இக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏற்றுக் கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை.
இதையும் படிங்க: பாஜக டூ தனிக்கட்சி.. பிரபல நடிகை திடீர் விலகல்.. காரணம் இதுவா?
அவர்களது அறிவை அறிவாலயத்தில் அடகு வைத்துவிட்டனர். அவர்கள் தற்போது அறிவாலய அடிமைகளாகிவிட்டனர். இது குறித்து கூட்டணிக் கட்சிகள் கண்டிப்பாக தமிழக மக்களிடம் விளக்க வேண்டும். இந்தி தெரிந்துவிட்டால், பிரதமர் மோடி பேசுவது மக்களுக்குப் புரிந்துவிடும் என அஞ்சுகின்றனர்.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கொள்கை வைத்துள்ளது திமுக. தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும், அப்போதுதான் நாம் ஆட்சியில் இருக்க முடியும் என அவர்கள் நினைக்கின்றனர்” எனக் கூறியுள்ளார். முன்னதாக, மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுக உள்பட அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.