நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!
Author: Hariharasudhan3 February 2025, 3:24 pm
தென்காசி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஆழ்வான் துலுக்கப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இதற்காக, தென்காசியில் இருந்து ரயில் மூலம், தான் வேலை செய்யும் பகுதிக்குச் செல்ல முயன்றுள்ளார்.
ஆனால், ரயிலை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மது அருந்திய அந்தச் சிறுவன், தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். இதனையடுத்து, பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், நடத்துநர் அந்தச் சிறுவனை பாவூர்சத்திரம் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுவன்ம் பேருந்து அந்த வழியாக திரும்பி வரும்போது நடத்துநரைத் தாக்குவதற்காக காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், நெல்லை, பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவில் வரை செல்லும் அரசுப் பேருந்து பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது மது போதையில் இருந்த அச்சிறுவன், பேருந்து நடத்துநரான அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்த முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் நைசாக சைடு வாங்குகிறதா மதிமுக? பரபரப்புக்கும் கட்டளைகள்!
மேலும், இதனைத் தடுக்க முயன்ற போது நடத்துநரின் இடது காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், உடனடியாக பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அச்சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து, நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.