சுட்டெரிக்கும் வெயில்… கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ : வனவிலங்குகள் வெளியேறும் அபாயம்!!
Author: Udayachandran RadhaKrishnan11 March 2022, 12:12 pm
திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனவிலங்குகள் கிராமங்களில் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. தொடர்ந்து மாலை வேளையில் குளிர் அதிகரித்து நீடித்து வருகிறது.
இதனால் கொடைக்கானலை சுற்றியுள்ள வனப்பகுதிகள் மற்றும் தரிசு பட்டா நிலங்கள் ஆகியவை வரண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பல ஏக்கர் அளவில் காட்டுத்தீ எரிந்து வருகிறது.
இதனால் அறிய வகை மூலிகை மரங்களும் செடிகளும் தீயில் கருகி வருகிறது.தொடர்ந்து காற்று வேகமாக இருப்பதால் அருகே உள்ள பகுதிகளும் தீபரவியும் வருகிறது. தீயை கட்டுப்படுத்த வனத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து வரும் காட்டுத் தீயினால் வனவிலங்குகள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.