கல்லூரி மாணவிக்கு ஆபாச SMS…தர்ம அடி கொடுத்த அண்ணன்…சக மாணவர்கள் போராட்டம்: பேராசிரியர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

Author: Rajesh
13 March 2022, 3:29 pm

கன்னியாகுமரி: கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகேயுள்ள கல்லூரி ஒன்றில் நாகர்கோவில் பறக்கை புல்லுவிளையைச் சேர்ந்த வாசுதேவன் ( 45) என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவரின் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தெரிகிறது.

இது குறித்து மாணவி தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவியின் சகோதரர் கல்லூரியில் புகுந்து பேராசிரியரை சரமாரியாக தாக்கினார். பதிலுக்கு பேராசிரியர் அந்த இளைஞரை தாக்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி மாணவி கல்லூரி நிர்வாகத்திடமும் போலீசிலும் புகார் செய்தார்.

இதனையடுத்து, பேராசிரியர் வாசுதேவன் நேற்று முன்தினம் கல்லூரிக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து மாணவ- மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரியில் தொடர்ந்து பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையில் நேற்று முதல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் பேராசிரியர் வாசுதேவன் மீது கொலை மிரட்டல், அடிதடி, பெண்மைக்கு களங்கம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!