பாடப் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய அரசுப் பள்ளி ஆசிரியர்.. முற்றுகையிட்ட விசிக!
Author: Hariharasudhan26 November 2024, 3:14 pm
திருப்பத்தூரில் பாடப் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய அரசுப் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சுமோட்டூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் ரித்விக். இவர் குனிச்சுமோட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தப் பள்ளியில் விஜயகுமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் கடந்த நவம்பர் 15ஆம் தேதி, ரித்விக் இருந்த வகுப்பில், ஆங்கிலப் பாடம் எடுத்து உள்ளார். அப்போது, இசைக் கருவிகள் குறித்து பாடம் எடுத்து வந்து உள்ளார். அதில், இசைக் கருவிகள் வாசிப்போர் மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்றும், தாழ்த்தப்பட்ட சாதியைக் குறிப்பிட்டும் பாடம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதிலும், சாதிப் பெயரை ரித்விக்கின் பாடப் புத்தகத்தில் எழுதியதாகவும் தெரிகிறது. பின்னர் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற சிறுவன் ரித்விக், இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த நவம்பர் 19ஆம் தேதி, பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், பள்ளிக்கு வந்து இது தொடர்பாக கேட்டு உள்ளனர்.
ஆனால் அதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் யாரும் சரிவர பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், திருப்பத்தூர் விசிகவினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இன்று (நவ.26) காலை, திருப்பத்தூர் விசிக மண்டல பொறுப்பாளர் சுபாஷ் தலைமையிலான கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதையும் படிங்க: போதையில் அத்துமீறிய பிரபல நடிகர் கைது.. காரில் தப்பியவரை விரட்டி பிடித்த போலீஸ்!
அப்போது, ஆசிரியரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார், திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வட்டாட்சியர் ஆகியோர், விசிகவினர் மற்றும் ஊர் மக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதனையடுத்து, முற்றுகையிட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.