சுத்தமான உணவு, பாதுகாப்பான உணவு : சாலையோர உணவகத்திற்கு மத்திய அரசின் தரச் சான்றிதழ்.. வாடிக்கையாளர்கள் வரவேற்பு!!
Author: Udayachandran RadhaKrishnan9 July 2022, 6:46 pm
மதுரையில் உள்ள சாலையோர உணவகத்திற்கு மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறையின் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை காளவாசல் பகுதியில் மதுரை புட்ஸ் ஸ்டீரிட் என்ற சாலையோர கடை இயங்கி வருகிறது. இதற்கு மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலமாக அங்குள்ள 20 கடைகளுக்கு உள்கட்டமைப்பு, உணவை பாதுகாக்கும் முறை, குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பின்அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் அதை எப்படி பராமரிப்பு செய்கிறார்கள் என்பது பார்க்கப்பட்டு பின் அறிக்கை தமிழக உணவு பாதுகாப்புத் துறை மூலம் மத்திய உணவு பாதுகாப்பு துறைக்கு தரச் சான்றிதழ் பெற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் உணவை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஆய்வில் உறுதியானதை தொடர்ந்துமத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறையின் தரச் சான்றிதழ் “மதுரை புட்ஸ் ஸ்ரிட்” வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக தெப்பக்குளம் பகுதியில் இருந்து வரும் சாலையோரக் கடைக்கு மத்திய உணவு பாதுகாப்பு துறையின் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல மதுரை புதூர் காய்கறி மார்கெட், திருப்பரங்குன்றம் காய்கறி மார்கெட்டிற்கு தூய்மையான மார்கெட் என மத்திய அரசு சான்றிதழ் கொடுத்துள்ளது.