செங்கல்பட்டில் 12ம் வகுப்பு மாணவன் ரயில் மோதி பலி : டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற போது விபரீதம்..?

Author: Babu Lakshmanan
12 March 2022, 11:03 am

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள எல்.என்.புறம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால் இவரது மகன் பவித்ரன்(17). இவர் படாளம் பகுதியில் உள்ள MCSM அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி வகுப்பு முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள படாளம் ரயில்வே நிலையத்தில் தனது இரு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பொழுது ரயிலின் முன்பு தவறி விழுந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த படாளம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், மாணவன் பவித்திரன் பயன்படுத்திய செல்போன் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மாணவன் பவித்திரன் உடன் இருந்த நண்பர்கள் யார் எனவும், அவர்கள் இன்ஸ்டா மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களுக்கு செல்பி எடுக்கும்பொழுது தவறி விழுந்தாரா..? என ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Producer Slams Dhanush Neek Movie இதெல்லாம் ஒரு படமா? தனுஷை வெளுத்து வாங்கிய விளாசிய பிரபல தயாரிப்பாளர்!