திமுக – பாஜகவினரிடையே மோதல்… ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி தஞ்சம் : போலீசார் குவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan24 November 2022, 6:04 pm
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுகவில் 13 கவுன்சிலர்களும் பாஜகவில் 2 கவுன்சிலர்களும் உள்ளனர் ..
இந்த நிலையில் மொடக்குறிச்சி பேரூராட்சியில் நடைபெற்ற முறைகேடு குறித்து பாஜக நிர்வாகிகள் சிலர் பல்வேறு இடங்களில் இன்று போஸ்டர் அடித்து ஒட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வினருக்கும் திமுகவினருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் சிவசங்கர் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
உடனடியாக அருகே இருந்த மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் இரத்தம் சொட்ட சொட்ட தஞ்சம் புகுந்த அவர் திமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.
இதனிடையே மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கூட்டமாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காவல் நிலையத்தில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதைஅடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொடக்குறிச்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.