அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பால் பீதியில் CM : இபிஎஸ் பதிலடி!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2025, 1:35 pm
அதிமுக – பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி நேற்று மீண்டும் இணைந்தது அரசியலில் பேசுபொருளானது.
இது குறித்து ஆளும் கட்சிகள் உட்பட தமிழக அரசியல் கட்சிகள் எதிராகவும், ஆதரவாகவு கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினோ, இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் – மொழியுரிமை – நீட் விலக்கு – #FairDelimitation உள்ளிட்டவை இடம்பெறுமா? இந்தத் துரோகக் கூட்டணியை – தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள் என பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளரா போடுங்க : கொளுத்தி போட்ட பாஜக தலைவர்!!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான திரு. ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார்.
நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அஇஅதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்!
பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது பதிவு வாயிலாக தெரிவித்தேன்.
தமிழ்நாட்டு நலனுக்கான “குறைந்தபட்ச செயல் திட்டம்” இருக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களும் அறிவித்திருந்தார்.
“என்னவா இருக்கும்?” என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த திரு. ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.
மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
“NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?”- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்!
திரு.ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! அதிமுக ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்!
காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!
தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!
(பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, “தொட்டுப் பார்- சீண்டிப் பார்” வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!) என தனது X தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.