ஆய்வுக்கு சென்ற அதிகாரி… புதரில் ‘குர்குர்’… சட்டென்று தாவி பிடித்து கடித்து குதறிய கரடி.. கூண்டு வைத்து பிடிக்க வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை…!!
Author: Babu Lakshmanan8 December 2022, 11:27 am
கோவை ; வால்பாறை புது தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கியதில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட இஞ்சிபாறை நல்லகாத்து பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக நான்கு பேரை கரடி தாக்கியது.
அதனைத் தொடர்ந்து, வால்பாறை புது தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். உட்பிரீயருக்கு சொந்தமான புது தோட்டம் பகுதியில் பணிபுரிந்து வரும் முத்துக்குமார் 12ஆம் நெம்பர் காட்டுப் பகுதியில் பணி மேற்பார்வையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, புதரில் இருந்து மறைந்திருந்த கரடி திடீரென தாக்கியது.

இதில் முத்துக்குமாரின் இடது கை மற்றும் மணிக்கட்டு பகுதிகள் காயமடைந்தது.
இதனை அப்பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூச்சலிட்டு அதனை விரட்டி, அவரை காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவி அழகு சுந்தர வள்ளி, துணைத் தலைவர் த.மா. செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதனிடையே, அப்பகுதியில் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.