AI தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல்.. காட்டு யானைகளை நவீன தொழில்நுட்பத்தில் விரட்டும் மலை கிராமம்..!

Author: Vignesh
23 August 2024, 10:25 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் வன எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களில் புகுந்து விவசாயத்தை சேதப்படுத்தி வருகின்றன.

வன விலங்குகளை தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சூரிய மின்வேலிஅமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வனவிலங்குகளை கட்டுப்படுத்துவது வனத்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது.

இந்நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக காரமடை அடுத்துள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் நவீன தொழில் நுட்பமான ஏ.ஐ. (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வனவிலங்குகளை தடுக்க நூதன முறையில் சோதனை முயற்சியை மேற்கொண்டது.

இந்த சோதனை முயற்சியில் யானைகள் ஊருக்குள் நுழையும் வழியில் கண்காணிப்பு கேமரா, ஒலி பெருக்கி உள்ளிட்ட கருவிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் வீடியோ மானிட்டருடன்இணைக்கப்பட்டுள்ளது. கேமராவில் பதிவாகும் காட்சிகள் வனத்துறைஅலுவலகம்,ஊராட்சிஅலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கு சமிக்ஞை(சிக்னல்) கொடுக்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 400 மீட்டர்தொலைவிற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம்தென்பட்டால் இந்த கேமரா மூலம் கண்டறியப்பட்டு ஏ.ஐ. தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல் அனுப்புகிறது.அங்கிருந்து வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சைரன், பழங்குடி இன மக்கள் எழுப்பும் ஒலியின் சப்தம்,ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கும்போது ஏற்படும் சப்தம் உள்ளிட்ட பல்வேறு சப்தங்களை தானாகவே ஒலிக்கிறது.

அந்த ஓசைக்கு பயந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கிருந்து விலகிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது..ஊராட்சி நிர்வாகத்தின் இந்த நூதன முறை சோதனை முயற்சி வெற்றி அடைந்ததன் காரணமாக இரவு முழுவதும் கண் விழித்து தோட்ட காவல் செய்து வந்த கிராம மக்கள் தற்பொழுது நிம்மதி அடைந்துள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!