பேட்டரி தண்ணீரை குடித்து மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்த மூதாட்டி : கடவுள் போல உதவிய காவலர்… குவியும் பாராட்டு..!!
Author: Babu Lakshmanan11 August 2022, 12:09 pm
கோவை : தண்ணீர் என்று நினைத்து தவறுதலாக பேட்டரிக்கு ஊற்றும் நீரை குடித்த மூதாட்டியை கோவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் நேற்று திருச்சி சாலை மேம்பாலம் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மூதாட்டி ஒருவர் அசைவின்றி படுத்திருந்தார். இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீதர் மூதாட்டி அருகே சென்று அவரை எழுப்பினார். ஆனால். மூதாட்டி எழவில்லை.

அவரது அருகில் பேட்டரிகளுக்கு ஊற்றும் டிஸ்டில்டு தண்ணீர் இருந்தது. அப்போது, மூதாட்டி தண்ணீர் என்று நினைத்து பேட்டரிக்கு ஊற்றும் நீரை குடித்து மயக்க நிலையில் படுத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, தண்ணீர் வாங்கி வந்த ஸ்ரீதர், மூதாட்டிக்கு கொடுத்து அவரை எழுப்பி முதலுதவி அளித்தர். தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய போஸ்காரர் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.