கணபதி பப்பா மோரியா… விநாயகர் சதுர்த்திக்கு ஆயத்தமாகும் கோவை : பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்..!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 4:54 pm

விநாயகர் சதுர்த்தி கோவையில் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டு அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.பி பத்ரி நாராயணன் கலந்து கொண்டு செல்போன்களை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் 67.5 லட்சம் மதிப்பிலான 451 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 107 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும் என கூறிய அவர், மொத்தம் 1500க்கும் மேற்பட்ட சிலைகள் கோவை மாவட்டத்தில் வைக்கப்பட உள்ளதாகவும், பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார் ஈடுபட உள்ளனர் எனவும், விநாயகர் சதுர்த்தி விழா மிக அமைதியாக நடக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

தற்போது கோவை மாவட்ட பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்ட மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும், இதன் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

கல்லூரி, பள்ளிக்கு அருகில் கஞ்சா, போதை பொருட்களை விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என கூறினார்.

  • Vijay TV couple Decides Honeymoon in the Amazon forest கல்யாணம் முடித்த கையோடு காட்டுக்குள் ஹனிமூன்…. விஜய் டிவி ஜோடியின் விசித்திர முடிவு!