முதலமைச்சர் ஸ்டாலின் பீகார் பயணம்… காலத்தின் கட்டாயம் ; காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து..!!

Author: Babu Lakshmanan
21 June 2023, 3:56 pm

தமிழகத் துறையை கலைத்து சிபிஐயுடன் இணைத்து விட வேண்டும் என்று சிவகங்கை பாராளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே புதுப்பட்டி உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பின் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக முதல்வர் மெகா கூட்டணிக்காக பீகார் செல்வது காலத்தின் கட்டாயம். மத்திய அரசின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது.அமலாக்கத் துறையை கலைத்து சிபிஐயுடன் இணைத்து விட வேண்டும். சிபிஐக்கு விதிமுறைகள் உள்ளது. ஆனால், அமலாக்க துறைக்கு எந்த விதிமுறைகளும் இல்லை. முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிகளை அச்சுறுத்தும் இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். தனி மனித சுதந்திரம். வருமான வரித்துறை சோதனைக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமா..? என தெரியவில்லை. ஆனால், பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது.

மத்திய அரசின் வீடு கட்ட வழங்கும் தொகை மிக குறைவாக உள்ளது. இத்திட்டத்தினால் பலர் கடனாளியாகிறார்கள், ஏனென்றால் செங்கல், மணல் விலை அதிகரித்து வருகிறது. அதனால், மத்திய, மாநில அரசுகள் வீடு கட்ட வழங்கும் தொகையை அதிகரிக்க வேண்டும், என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் (தெற்கு) ராம.சுப்புராம் முன்னாள் சேர்மன் ஜெயலட்சுமி, வட்டார காங்கிரஸ் தலைவர் கணேசன், நகரத் தலைவர் முத்தையா, கிராம காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!