ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்!
Author: Udayachandran RadhaKrishnan11 December 2023, 8:59 am
ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்!
திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் தினேஷ்குமார் ( 30 ). இவர் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர் .
இவர் ரமேஷ் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாகவும் அதற்கு பல மடங்கு வட்டி செலுத்தியும் தினேஷ்குமாரின் இரண்டு இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதாகவும் வீட்டின் பத்திரத்தை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மணமுடைந்த தினேஷ்குமார் கடந்த எட்டாம் தேதி இரவு வீட்டிலிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நன்னிலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தினேஷ்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்த ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது