திமுக கவுன்சிலர் மீது காரித்துப்பிய திமுக செயலாளர்.. கடலூர் கூட்டத்தில் பரபரப்பு!
Author: Hariharasudhan20 February 2025, 1:58 pm
கடலூர் அருகே, திமுக கவுன்சிலர் மீது திமுக நகர்மன்ற துணைத் தலைவர் காரித்துப்பிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
கடலூர்: சட்டசபையில் சட்டை கிழியத் தான் செய்யும், சண்டை வரத்தான் செய்யும் என்றும், அங்குள்ள சேர், பெஞ்ச் ஆகியவை உடைக்கப்படும் என்றும் நாம் பல சினிமாக்களிலும், ஏன், சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம்.
ஆனால், இங்கு உறுப்பினர் மீது காரித்துப்பிய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், முக்கியமாக, ஆளும் திமுக நகர்மன்ற துணைத் தலைவரே, திமுக கவுன்சிலர் மீது காரித் துப்பியதால் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது எதற்காக நடந்தது? எங்கு நடந்தது என்பதை பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில், இன்று வழக்கம்போல் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக நகர்மன்றத் தலைவர் வெண்ணிலா, துணைத் தலைவர் பரமகுரு, கவுன்சிலர்கள் அதிகாரிகள் என பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டமும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 13வது வார்டு திமுக கவுன்சிலர் தனபால், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும், நகராட்சியில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
திமுக கவுன்சிலரே முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டியதால், அதே திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான பரமகுரு, கவுன்சிலர் தனபால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஒருகட்டத்தில் ஒருமை பேச்சு வரை சென்றதால், உறுப்பினர்க முக சுழிப்பு அடைந்தனர்.
இதையும் படிங்க: மனைவி, ரிசப்ஷனிஸ்ட் உடன் சேர்ந்து ரூ.17 லட்சம் அபேஸ்.. பாஜக பிரமுகரின் மோசடி வெளியானது எப்படி?
மேலும், ஒருபடி மேலே சென்ற திமுக நகர்மன்ற துணைத் தலைவர் பரமகுரு, திமுக கவுன்சிலர் தனபால் மீது காரித் துப்பியதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சக கவுன்சிலர்கள், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதானம் செய்ய முறபட்டனர். இறுதியில், இருவரையும் சமாதானப்படுத்தினர். இவ்வாறு பெண் நகர்மன்றத் தலைவர் உள்பட பல பெண் உறுப்பினர்கள் இருந்த அரசு மேடையில், ஆளும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும், அநாகரீகப் பேச்சுகள் மட்டுமின்றி, காரித் துப்பிய நிகழ்வு அரசியல் மேடையில் பேசுபொருளாகியுள்ளது.