விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!
Author: Hariharasudhan4 March 2025, 2:57 pm
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். எனவே, அவருடைய கருத்தை அவர் கூறுகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவுக்கு மாற்று அதிமுகதான்.
புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அடுத்து நம்ம ஆட்சி என்று சொல்வது வழக்கம்தான். அது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழ்நாடு முழுவதும் திமுக ஆட்சிக்கு எதிரான அலை நிலவுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் இருந்து புலம்பல்கள் வெளிவரத் துவங்கியுள்ளது.
மகத்தான தலைவர் எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது, விஜய் – எம்.ஜி.ஆராக முடியாது. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். விஜய் அவர் ஆசையைப் பேசியிருக்கிறார். விஜய் போலவே மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் கனவு இருக்கும். ஆனால், பாஜகவின் பகல் கனவு பலிக்காது.
மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதை அதிமுக ஏற்கவில்லை. மாநில அரசுக்கு நிதி தர மறுப்பதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தவெகவுக்கு தமிழகத்தில் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக அக்கட்சியின் சிறப்பு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விஜயிடம் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: ’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!
அது மட்டுமல்லாமல், 2026ல் ஆட்சி மாற்றம் நிகழும் என்றும், 1967ல் அண்ணா ஏற்படுத்திய அரசியல் பிளவும், 1977ல் எம்ஜிஆர் ஏற்படுத்திய அரசியல் பிளவும் 2026ல் நடைபெற்று தவெக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என சமீபத்தில் நடைபெற்ற தவெக 2ம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.