மாணவியை கேலி செய்து தாயை விரட்டி அடித்த போதை இளைஞர்கள்.. ‘நீ என்ன பெரிய ஹீரோயினா’ எனக் கேட்ட போலீஸ் – மாணவி குமுறல்..!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 4:34 pm

தருமபுரி அருகே சட்டக் கல்லூரி மாணவியை ஈவ்டிசிங் செய்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் அரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மூத்தானூர் அருகே உள்ள கம்மாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவருடைய மகள் சரண்யா. இவர் சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தனது கல்லூரியை முடித்துவிட்டு பேருந்தில் சென்ற சரண்யா நேற்று இரவு நேரத்தில், பேருந்தில் இருந்து இறங்கி பின்பு அவருடைய அண்ணனுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது பேருந்து நிறுத்தம் அருகிலேயே பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது, இந்த பெண்ணை கேலி கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சரண்யா, அங்கிருந்த இளைஞர்களை வாய் வார்த்தைகளால் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, அந்த இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், அந்தப் பெண் மற்றும் அவருடைய அண்ணனையும் தாக்கியுள்ளனர். இதை அறிந்த சரண்யாவின் அம்மா மற்றும் அவருடைய உறவினர்கள், அவர்களிடம் முறையிடும்பொழுது, அவர்களையும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள், அரசியல் கட்சியினர் விரட்டி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

பின்பு காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில், அங்கு சென்ற காவல்துறையினர், இரு கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியபோதும், காவல்துறையினரின் முன்னிலையிலேயே அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட கம்மாளம்பட்டி கிராம மக்கள் ஆத்திரமடைந்து பின்பு அரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, காவல்நிலையத்தில் சாதி பாகுபாடு காட்டுவதாகவும், நீ என்ன பெரிய ஹீரோயினா..? என போலீசார் கேட்டதாகவும் அந்த மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

இதில் தங்களுக்கும், தங்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதாகவும், எனவே இதை முற்றிலுமாக தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் தன்னை ஈவிடிசிங் செய்த குடிபோதையில் இருந்த இளைஞர்கள் மற்றும் இதற்கு ஒரு சில கட்சியைச் சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கள்ளத்தனமாக மது பாட்டில்களை அப்பகுதியில் விற்பதால் தான் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாகும் இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவும், இவ்வழியாக செல்லும் பெண்களை இழிவாக பேசுவதும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சரண்யா தெரிவித்தார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!