கொல்கத்தா இளைஞர் செய்த மோசடியால் சிக்கிய திண்டுக்கல் வாலிபர் : கமிஷனுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் கொடுமை!!
Author: Udayachandran RadhaKrishnan30 June 2022, 7:07 pm
திண்டுக்கல் : கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு கொல்கத்தா சைபர் கிரைம் போலீசிடம் வசமாக சிக்கிய செல்போன் கடை உரிமையாளரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை சத்யாநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 35. இவர் வடமதுரையில் செல்போன் கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் வட மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் 5 சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். அந்த சிம்கார்டுகள் உங்கள் பெயரிலேயே இருக்கட்டும், வீடியோ கேம் விளையாட நான் அவற்றை பயன்படுத்திக்கொள்கிறேன். அதற்காக நான் உங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புகிறேன் என்று கூறி மாதந்தோறும் ராஜேந்திரனுக்கு பணம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் அந்த வடமாநில நபர் சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படம் மற்றும் தொடர்பு எண்களை எடுத்து, புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அந்த பெண்களை மிரட்டி அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா, லால் பஜார் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரை மிரட்டி அந்த வடமாநில நபர் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். மேலும் மூன்று லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டு மீண்டும் மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் லால் பஜார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து கொல்கத்தா சைபர் கிராம் போலீசார் பிரச்சனைக்குரிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த எண்ணிற்குரியவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பதை கண்டறிந்து வடமதுரை போலீசார் உதவியுடன் ராஜேந்திரனை கைது செய்தனர்.
மேலும் அவர் பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்கத்தா போலீசார் ராஜேந்திரனை வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி சசிகலாவிடம் கைது ஆணை பெற்று கொல்கத்தாவிற்கு அழைத்துச்சென்றனர்.
செல்போன் கடை உரிமையாளரை கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.