பாஜக பிரமுகரின் குடோனுக்கு தீவைப்பு.. கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசம்.. சாலை மறியலில் ஈடுபட்ட திண்டுக்கல் பாஜகவினர்..!!
Author: Babu Lakshmanan24 September 2022, 12:07 pm
திண்டுக்கல் அருகே குடைபாறைப்பட்டியில் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள குடை பாறை பட்டியில் வசித்து வருபவர் செந்தில் பால்ராஜ். இவர் பாஜக மேற்கு மாநகரத் தலைவராக இருந்து வருகிறார். இவர் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தனது வீட்டின் அருகே குடோன் அமைத்து அதில் விற்பனைக்கு வந்த இருசக்கர வாகனங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குடோனில் உள்ளே சென்று செந்தில் பால்ராஜ்க்கு சொந்தமான இண்டிகா கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. வாகனங்கள் தீப்பிடித்து எரிவதை கண்ட பால்ராஜ் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தீவைத்த சம்பத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.