மீன் கடை டெண்டரால் பதவியை இழந்த திமுக நகர்மன்ற துணைத் தலைவர் : நீக்கம் செய்து நகராட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2022, 4:45 pm
தேனி : பெரியகுளம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வெற்றி திமுக வேட்பாளர் ராஜினாமா செய்யாத நிலையில் தற்போது பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியின் 26 வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ராஜாமுகமது நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால் திமுக கூட்டணியில் இருந்து நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் திமுகவை சேர்ந்த ராஜா முகமது போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று பெரியகுளம் நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவராக திமுகவிலிருந்து வெற்றி பெற்ற ராஜா முகமதுவை நகர்மன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திமுக உறுப்பினர் ராஜாமுகமது நகர்மன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது 26 வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட ராஜா முகமது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் நகராட்சி மீன் கடை உரிமம் பெற்றிருந்ததை மறைத்து தேர்தலில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் தேர்தல் நடத்தும் அலுவலரான பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் நகர்மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான பரிந்துரைக் கடிதத்தை தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் முறையாக தெரு விளக்குகள் எரிவதில்லை சாக்கடை கழிவுகளை அகற்றுவதில் என நகர்மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவகுமார் தெரிவித்தார்.