‘திமுகவை அழிக்க பார்க்கிறார் TRB ராஜா’… கட்சி பொறுப்பில் இருந்து விலகும் 200 நிர்வாகிகள் ; அதிர்ச்சியில் அறிவாலயம்..!!
Author: Babu Lakshmanan12 August 2022, 8:39 pm
நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்தலில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தலையீட்டால், திமுகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
திமுக உட்கட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவின் ஆதரவாளரான ஆனந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

ஆனால் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் வாக்களிக்க தகுதியுள்ள மொத்தம் 280 திமுக பொறுப்பாளர்களில் அண்ணாதுரை என்பவருக்கு 216 பேர் ஆதரவு இருந்த நிலையில், மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டிஆர்.பி.ராஜா பரிந்துரையின் பேரில், ஆனந்த் என்பவரை நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக அறிவித்துள்ளது.
திமுகவை அழிக்கும் நடவடிக்கைகளில் மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும், திமுகவின் தலைமைக்கு எதிராக நடந்த இக்கூட்டத்தில் திமுக தலைமை ஆனந்த் அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இல்லையெனில், அண்ணாதுரை ஆதரவாளர்களான நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 3 பேர் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் 6 பேர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய பிரதிநிதி, கிளைகழக செயலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியினை நாளை மறுநாள் மறைந்த தமிழக முதல்வர் தலைவர் மு.கருணாநிதியின் தாயார் சமாதி அமைந்துள்ள திருவாரூரை அடுத்துள்ள காட்டூருக்கு சென்று தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கபோவதாக கூட்டாக சேர்ந்து அறிவித்துள்ளனர்.