கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக திட்டம் : கோவை பிரச்சார கூட்டதில் எஸ்.பி.வேலுமணி பேச்சு..!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 5:16 pm

கோவை: கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கொடிசியா வளாகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கச்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கோவையில் 829 வார்டு வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய எடப்பாடியார் வந்துள்ளார். அதிமுக ஆட்சியில் கோவைக்கென கேட்ட திட்டங்கள் அனைத்தையும் கொடுத்தவர் எடப்பாடியார்.

70 ஆண்டுகால பிரச்சனையான அத்திக்கடவு -அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நிதியை ஒதுக்கி அதற்கான அடிக்கல் நாட்டினார். உண்மையாகவே நம்பர் ஒன் முதலமைச்சராகவும், அதிக விருதுகள் பெற்றவராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி தான்.

நம்முடைய மேயர் தான் கோவை மாநகராட்சிக்கு வருவார். அதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்களில் அனைத்து வார்டுகளிலும் நமது வேட்பாளர் தான் வெற்றி பெற வேண்டும்.

கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக திட்டமிட்டுள்ளது. கரூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து மோசமான நிலையை உருவாக்கி வருகின்றனர். அமைதிக்கு பங்கம் விளைவித்தால் விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள், கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ. க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…