பேரனுக்கும் போஸ்டர் ஒட்ட முடியாது.. தலித் பாதுகாப்பு? திமுக முக்கியப்புள்ளி பரபரப்பு குற்றச்சாட்டுடன் விலகல்!

Author: Hariharasudhan
5 February 2025, 2:53 pm

திமுகவில் பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகுதொலைவில் இல்லை என கட்சியிலிருந்து விலகிய நிர்வாகி கூறியுள்ளார்.

சேலம்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எழிலரசன், “கடந்த 2015ஆம் ஆண்டு கட்சியில் (திமுக) சேர்ந்த நிலையில், பல்வேறு பொறுப்புகளை நான் வகித்திருக்கிறேன். ஆனால், கட்சியில் பல்வேறு உட்கட்சி பிரச்னைகள் நிலவுகிறது. இது தொடர்பாக நிர்வாகிகளிடம் புகார் அளித்து, அதற்கு நடவடிக்கை இல்லை.

எனவே, கட்சியை விட்டு என்னை நீக்குங்கள் எனச் சொன்னாலும், அதற்கும் பதில் அளிக்கவில்லை, என்னை நீக்கவும் இல்லை. மேலும், கட்சியில் துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் இருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என குறுகிய காலத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வந்துவிட்டார்.

ஆனால் கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதையே கிடையாது. தற்போது இன்பநிதிக்கு வெளிப்படையாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வருங்காலத்தில் அவருக்கும் பணியாற்ற வேண்டியிருக்கும் என நினைத்த போது வேதனை ஏற்பட்டது. எனவே, கட்சியில் இருந்து விலகுகிறேன். மேலும் பலர் அடுத்தடுத்து விலகுவார்கள்” எனக் கூறினார்.

Salem DMK Worker left party

சேலத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவர், தற்போது சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்தார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, சேலம் மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இந்த நிலையில் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல்பட்டு வந்த சேலம் MP.எழிலரசன் ஆகிய நான், 04.02.2025 இன்று முதல் கீழ்காணும் காரணங்களால் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: போராட்டம் நடத்த கூட நீதிமன்றத்திற்கு போக வேண்டிய நிலைமை.. திமுக அரசு மீது வானதி விமர்சனம்!

திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை, கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை, இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாள்வரை ஒத்துழைப்பு நல்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

01.09.2024 நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு காரணங்களால் எங்களை கட்சியில் இருந்து நீக்குங்கள் என சேலம் ராஜேந்திரன் அவர்களிடம் விருப்பம் தெரிவித்திருந்தோம். தலித் மக்களுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை இல்லையென்றால் திமுக கண்டுக்கொள்ளாது. சேலத்தில் ஒரு சமூகம் சார்ந்த கட்சியாக திமுக மாறிவிட்டது. சமூகநீதி என்பது கட்சியின் கொள்கையாக மட்டுமே உள்ளது. செயலில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!