‘உனக்கு மட்டும் எப்படி நல்லா வியாபாரம் ஆகலாம்’ : திமுக பிரமுகரின் கடையை தீயிட்டு கொளுத்திய திமுகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 5:17 pm

விழுப்புரம் ஜானகிபுரம் கூட்டு சாலையில் திமுக மாணவர் அணியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் ஆவின் நிறுவனம் சார்பில் நெடுஞ்சாலையில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் கடைக்கு அருகாமையே கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோலியனூர் ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகியான சுரேஷ் குமார் என்பவர் டீக்கடையை தேசிய நெடுஞ்சாலையில் துவக்கினார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் விழுப்புரம் மாவட்ட திமுகவினர் இருவரையும் சமாதானம் செய்து கடையை இருவரும் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் குப்பை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவின் கடையில் சசிகுமாரின் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் இருந்துள்ளார்.

அப்போது திடீரென கடை தீப்பற்றி எரிந்தது. குழந்தைகளை தூக்கிக்கொண்டு சசிகுமாரின் மனைவி வெளியே ஓடி வந்ததால் உயிர் சேதம் ஏற்படாமல் கூரை பகுதி மற்றும் இருக்கைகள் எரிந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து சென்றனர். தீ வைத்தது சுரேஷ் ஆட்கள்தான் என தெரிந்து சசிகுமாரின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு சுரேஷ் குமாரின் கடையை உடைத்தனர்.

பின்னர் அங்கு காவல்துறையினர் இருவரையும் அழைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஒரே கட்சியில் இருந்துகொண்டு ஒரு தரப்பினரை வாழ விடக் கூடாது என சக திமுக பிரமுகர் தீ பற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Rajini Talk About Jailer 2 கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!
  • Close menu