களை எடுத்தாச்சு.. 2026 நாம தான்.. இபிஎஸ் சூளுரை!

Author: Hariharasudhan
15 அக்டோபர் 2024, 3:25 மணி
EPS
Quick Share

2026ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வருவது உறுதி என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம்முடைய கட்சி தோன்றிய காலகட்டத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலையும், அதிமுக தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகளையும் நினைத்துப் பார்க்கிறேன். இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இருண்ட கால ஆட்சிதான் அப்போதும், 1972-லும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது, வறட்சியும், பஞ்சமும் பல மாவட்டங்களில் ஏற்பட்டு, அதனால் தமிழக மக்கள் மூட்டை, முடிச்சுகளுடன் தங்கள் ஊர்களில் இருந்து கூலி வேலைக்கு இடம்பெயரத் தொடங்கினார்கள். விலைவாசி ஏற்றம், பொருளாதார பாதிப்பு, தொழிலாளர்கள் போராட்டம் என்று அனைத்து வகையிலும் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருந்தனர்.

கருணாநிதியின் அடக்குமுறையையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இன்னொருபுறம் அதிமுகவின் உணர்வுப்பூர்வமான தொண்டர் வத்தலகுண்டு ஆறுமுகம் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் திமுகவினரின் அராஜகத்திற்கு பலியாயினர்.

1976-ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் சிறைக் கொடுமை அனுபவித்து, கட்சிக்கு பாடுபட்ட தியாகசீலர்களை எல்லாம் இந்த நாளில் நன்றியோடு நினைவுகூர்வது எனது கடமையெனக் கருதுகிறேன்.

அண்ணாவின் கனவு சிதைக்கப்பட்டு, ஆங்காங்கே ஆளும் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, அவர்களது குடும்பங்கள் சிற்றரசர்களாக கோலோச்சி, மக்களை வாட்டி வதைக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவில்லையா? என்று தன் உரிமைக் குரலை எம்.ஜி.ஆர் மக்களுக்காக உயர்த்தத் தொடங்கிய காலகட்டம் அது.

ஜெயலலிதாவின் தலைமையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகவும், அவர்களின் அருந்தொண்டனாகிய உங்கள் அன்புச் சகோதரனான எனது தலைமையில் சுமார் நான்கரை ஆண்டுகளும் நாடு போற்றும் நல்லாட்சியை, மக்கள் பாராட்டும் மகத்தான ஆட்சியைத் தந்ததில் பெருமிதம் அடைகிறேன்.

இவ்வாறாக, கட்சி தொடங்கிய காலம் தொட்டு, மக்கள் பணியில் கண் துஞ்சாது கடமையாற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 30 ஆண்டுகால மக்கள் ஆட்சியில் மகத்தான தொண்டுகளால், மக்கள் போற்றும் சாதனைகளால் தமிழ் நாடு தலை நிமிர்ந்தது; தன்னிகரில்லாத எழுச்சி பெற்றது. இதனால், சமூக நீதி மலர்ந்தது; சமத்துவம் மலர்ந்தது; சமதர்மம் பிறந்தது; மக்கள் வாழ்வு உயர்ந்தது; தமிழகத்தில் கல்வி வளர்ந்தது; மக்களின் கவலைகள் மறைந்தன.

மற்றொரு புறம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, புராண, இதிகாசங்களில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தந்திரங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் இணையான திரை மறைவு வேலைகளால், சூழ்ச்சிகளால், சதி வலைகளால், உடனிருந்து கொள்ளும் வியாதிகளாய் பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு கட்சியை அழிக்கத் துடிக்கும் எட்டப்பர்கள் இந்த இயக்கத்தையே காட்டிக்கொடுத்து, அழிக்கத் துணிந்தார்கள். எத்தனையோ சூழ்ச்சிகள் நடைபெற்றன.

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்சி நீடிக்கப்போகிறது?” என்று ஏளனம் பேசியவர்கள் ஒருபுறம். மனசாட்சியை மறைத்துவிட்டு, கபட நாடகங்களை அரங்கேற்றினார்கள். ஆனால், அவர்கள் சூதுமதி பலிக்கவில்லை; சூழ்ச்சிகள் வேலை செய்யவில்லை. அவர்கள் விரித்த வலையிலே அவர்களே மாட்டிக்கொண்டதை நாடறியும்.

“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் சூளுரைத்து சபதம் ஏற்றார்கள். அவர்களின் சபதத்தை நிறைவேற்றி, மக்கள் பணியே மகேசன் பணி என்ற அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏற்றி, எண்ணற்ற துரோகங்களை முறியடித்து, ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியை சிறப்புடன் நடத்த நம் இருபெரும் தலைவர்களின் ஆசி உங்கள் பேரன்பால் எனக்கு கிடைத்தது.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும்” என்பதற்கு இணங்க ஜெயலலிதாவின் ஆட்சி எனது தலைமையில் மக்களாட்சியாகவே நடந்தது. என்னுடைய அயராத முயற்சிகளுக்கும், தொய்வில்லாத பணிகளுக்கும் நாள்தோறும் துணை நிற்கும் உங்கள் ஒவ்வொருவரையும் இந்தப் பொன்னாளில் நன்றியோடு நினைக்கிறேன்; கட்சித் தொண்டர்களின் அர்ப்பணிப்பை, தியாகத்தை நினைத்துப் போற்றுகிறேன்.

இதையும் படிங்க: டீக்கடையில் ஸ்டாலின்.. 20 இடங்களில் தேங்கிய மழைநீர்.. தத்தளிக்கும் சென்னை

‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது. “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” என்ற வள்ளுவரின் அறிவுரையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவப் பேராசான் நமக்குத் தந்திருக்கிறார்.

உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம். “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற வைர வரிகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது.

எம்.ஜி.ஆரின் ஆட்சியை, ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.

அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கட்சியின் வெற்றிகாகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன். “விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது” என்ற எம்.ஜி.ஆரின் தத்துவ வரிகள் நமக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  • anna திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!
  • Views: - 67

    0

    0

    மறுமொழி இடவும்