உதயநிதிக்கு மட்டும் No தடா.. அடித்துச் சொல்லும் இபிஎஸ்!
Author: Hariharasudhan28 March 2025, 2:29 pm
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்றைய அலுவல்கள் தொடங்கிய நிலையில், மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அவையின் மரபுப்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

எனவே, அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “மக்கள் பிரச்னைகளைக் கூறுவதே எதிர்கட்சிகளின் கடமை. ஆனால், இன்று மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.
மக்களைப் பற்றி அரசுக்கு கவலை இல்லை. குடும்பத்தைப் பற்றி மட்டுமே திமுக அரசு கவலை கொள்கிறது. உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக பேச பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவலரையேக் கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
போதைப்பொருளை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் மாநிலத்தில் நிலவுகிறது. முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்.
திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்றைய தினம் எங்களைத் திட்டமிட்டு பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார். எவ்வளவு முக்கியமான பிரச்னையாக இருந்தாலும், துணை முதலமைச்சரின் பதிலுரை தடை படக்கூடாது என்று நினைக்கின்றனர்” எனக் கூறினார்.