ஓபிஎஸ்சுக்கு சிக்னல் காட்டிய இபிஎஸ்.. கூட்டணி உறுதி? திட்டவட்டமான பதிலால் பரபரப்பு!
Author: Hariharasudhan27 March 2025, 2:53 pm
அதிமுகவைப் பொறுத்தவரை திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோயம்புத்தூர்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவையொட்டி, அவருக்கு நெல்லை சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதன் பின்னர் தூத்துக்குடி வந்த அவர், அங்கு வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது இபிஎஸ் பேசுகையில், “தமிழக பிரச்னை தொடர்பாக அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்து மனு அளித்தேன். கோயிலாகக் கருதும் அதிமுக அலுவலகத்தில் ரவுடிகள் மூலம் தாக்கியவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே, பிரிந்தது பிரிந்த்துதான். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது.
2026ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் இருக்கிறது. கூட்டணி அமைக்கும்போது செய்தியாளர்களை அழைத்து தெரிவிப்போம். தேர்தல் நெருங்கும்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும், நிச்சயம் நடைபெறும். அதிமுகவைப் பொறுத்தவரை திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல.

தேர்தல் நேரத்தில் யார் யாரெல்லாம் ஒத்தக் கருத்துடைய கட்சிகளோ, எங்களுடன் சேர்த்துக் கொள்வோம். இன்று தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என அத்தனை பேருக்கும் தெரியும். பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்குக் கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட்டே கிடையாது..தடை பண்ணுங்க..குஜராத் அணி பவுலர் ஆவேசம்.!
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், “சென்னையில் அதிமுக அலுவலகம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்த பிறகு, கூட்டணி குறித்து இபிஎஸ் பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.