வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் உலா வரும் யானைகள் : வாகனங்களை வழிமறித்து கம்பீரமாக நின்ற காட்சி இணையத்தில் வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2022, 4:06 pm
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை சாலையில் காரை வழிமறித்த காட்டு யானைகள் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோடைகாலம் என்பதால் வனப் பகுதிகளுக்குள் உள்ள காட்டு விலங்குகள் வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு உலா வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வன எல்லைகளை கடந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்லும் காட்டுயானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறது.
இதனால் கோவை வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை பூண்டி சாலையில் வெள்ளிங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் காரில் சென்றுள்ளனர்.
அப்போது முதல் வளைவில் காட்டு யானைகள் சத்தம் கேட்டதால் உடனடியாக காரை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த சாலையில் 2 ஆண் யானைகள் வந்து நின்றது. நீண்ட நேரமாக அதே பகுதியில் நின்ற யானைகள், பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் யானை ஊருக்குள் வராமல் இருக்க பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பூண்டி சாலையில் இரண்டு காட்டு யானைகள் கம்பீரமாக நிற்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.