செல்போன் திருட்டு.. மடக்கிப்பிடித்த போலீசை ரத்தம் சொட்ட சொட்ட வெட்டிய சிறுவர்கள்..!
Author: Vignesh29 ஜூன் 2024, 1:45 மணி
திருச்சியில் செல்போன் குற்றவாளிகளை பிடிக்க முயற்சித்த காவலருக்கு அறிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாநகரப் பகுதிகளில், கடந்த 23ஆம் தேதி, ஒரே இரவில் மட்டும் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு என்று, 10குற்ற சம்பவங்கள் பதிவாகின. அதையடுத்து, அன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட, 88பேருக்கு மெமோ கொடுக்க, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அதிரடியாக உத்தரவிட்டார்.
அதன்பிறகு அனைவரிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு, ‘இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது’ என்று எச்சரித்து அனைவரையும் அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து, திருச்சி மாநகரப் பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகளை காவலர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை, 2 மணியளவில், கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓயாமரி சுடுகாடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை விசாரணைக்காக நிறுத்தியபோது, அவர்கள் செல்போன் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகள் என்பதை தெரிய வந்தது, அவர்களை கைது செய்ய முயன்றபோது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற கோட்டை காவல் நிலைய முதல் நிலை காவலர் அப்துல்காதர் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றனர்.
அதையடுத்து, அதேபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்கள் அவர்களை துரத்தி, மடக்கி பிடித்தனர். பிடிபட்ட மூவரும் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த, 18வயதிற்கும் குறைவான இளம் சிறார்கள் என்பதும், இவர்கள் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும் தெரிய வந்தது.
அரிவாளால் வெடடப்பட்ட அப்துல்காதர், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலரை வெட்டிய மூன்று பேரையும் கோட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் சிறார்களான இவர்கள் கஞ்சா போதையில் இரவில் செல்போன் பறிக்க உலா வந்ததும் தெரிய வந்தது. திருச்சி மாநகரத்தில் கஞ்சா போதை சிறுவர்களால் போலீஸ் காவலர் வெட்டப்பட்ட சம்பவம், சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0