100 நாள் வேலைதிட்ட பணியாளர் தற்கொலையில் பரபரப்பு திருப்பம் : ஆட்சியர் எடுத்த அதிரடி ஆக்ஷன்!!
Author: Udayachandran RadhaKrishnan13 April 2023, 4:37 pm
மதுரை திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (38). கோவையில் பணிபுரிகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (31). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளன. குடும்பத்தில் போதிய வருமானமின்றி குழந்தைகளை வளர்க்க நாகலட்சுமி மிகவும் சிரமப்பட்டார்.
இதையடுத்து வேலை கேட்டு மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தார். அவரது பரிந்துரையின்பேரில் மையிட்டான்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளர் வேலை வழங்கப்பட்டது. அவர் கடந்த ஒன்றரை ஆண்டாக வேலை செய்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த நாகலட்சுமியை மையிட்டான்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், ஊராட்சி எழுத்தர் முத்து ஆகியோர் அவரை வேலை செய்யவிடாமல் தடுத்ததோடு `இனி வேலை தர முடியாது’ என மிரட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நாகலட்சுமி மதுரை ஆட்சியரை சந்திக்கத் திட்டமிட்டு நேற்று காலை மையிட்டான்பட்டியில் இருந்து திருமங்கலம் செல்லும் அரசுப் பேருந்தில் தனது 2 குழந்தைகளுடன் புறப்பட்டார்.
சிவரக்கோட்டை அருகே அனுமான் கோயில் பகுதியில் பேருந்து வந்தபோது 2 குழந்தைகளையும் அருகிலுள்ள பயணி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு பேருந்தில் இருந்து திடீரென குதித்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் தற்கொலை செய்து கொண்டதால் 5 குழந்தைகளும் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமங்கலம் டிஎஸ்பி வசந்தக்கண்ணன் கூறுகையில், ‘இச்சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ’ என்றார்.
தற்கொலை செய்துகொண்ட நாகலட்சுமியின் கைப்பையில் இருந்து அவர் தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர்.
அதில் கூறியிருப்பதாவது: 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளராகப் பணியாற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்த நிலையில் தொடர்ந்து வேலையை தனக்கு வழங்க மறுத்த மையிட்டான்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், எழுத்தர் முத்து ஆகியோர் என்னை தவறாக பேசி மனதைக் காயப்படுத்தினர்.
இதுதொடர்பாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்காததோடு அங்கு பணியில் இருந்த போலீஸார் ‘ஏன் அவர்கள் மீது புகார் அளிக்கிறாய்’ என தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டி என்னை தற்கொலைக்குத் தூண்டினர். எனக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். வேலை கேட்டது தவறா? எனது தற்கொலைக்கு முக்கியக் காரணம் ஊராட்சி உறுப்பினர்கள், எழுத்தர் ஆகியோர்தான்.
அவர்கள் என்னை அசிங்கமாகப் பேசி, அடிக்க கையை ஓங்கினர். அவர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான மையிட்டான்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் முத்துவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.