தாலிக்கு தங்கமா? ரூ.1000 திட்டமா? கூட்டி கழிச்சு பார்த்து எந்த திட்டம் நல்ல திட்டம்னு சொல்லுங்க : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 5:45 pm

அதிமுக தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது, எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என மதுரையில் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி மதுரை மேற்கு தொகுதியின் 10 பிரச்சினைகளின் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் மதுரை மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு வழங்கினார்.

அதில் மாநகராட்சி 82, 83 வார்டுகளில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் 973 குடும்பங்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும், மாநகராட்சி பகுதிகளான விராட்டிப்பத்து, பொன்மேனி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 63, 65 வார்டுகளில் தாழ்வாக செல்லக்கூடிய உயர் மின் கம்பிகளை அகற்ற வேண்டும், தொகுதிக்குள் அரசு இருபாலர் கல்லூரி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில் “மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எவ்வளவு மனுக்கள் கொடுத்தாலும் நிறைவேற்றுவதில்லை, தற்போது முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 10 கோரிக்கைகளை மனுவாக அளித்து உள்ளேன்.

தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஒரு பெண் தலா 1 இலட்சம் வரை பயன் அடைந்து வந்தனர், புதுமைப் பெண் திட்டத்தால் ஒருவருக்கு 36,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும், எந்த திட்டம் சிறந்த திட்டம் எனபதை மக்களே முடிவு செய்ய வேண்டும்.

எந்தவொரு குளிருபடியும் இல்லாமல் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு மிகவும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும், திமுக தலைமையிலான தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அறிவிப்போடும், விளம்பரத்தோடும் நிற்கிறது, நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிவிப்பால் பலர் நகைகளை இழந்து உள்ளனர்.

48 இலட்சம் பயன் அடைய கூடிய நகைக்கடன் தள்ளுபடியில் 13 இலட்சம் பேர் மட்டுமே பயன் அடைந்து உள்ளனர், உதயநிதி, கனிமொழி பேச்சை கேட்டு மக்கள் நகைகளை இழந்து உள்ளதும் போச்சு நோல்லக்கண்ணா என புலம்பி கொண்டு உள்ளனர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர எங்கள் ஆட்சியில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து விட்டோம், எங்கள் ஆட்சியில் கொரைனாவால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஆனது. தமிழக அரசு விரைவாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது. தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது, எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என அடித்து சொல்கிறேன், மாற்று கருத்து ஏதுமின்றி சொல்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வர ஆவார்” என கூறினார்

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!