தொழுகைக்குச் சென்று திரும்பிய கருணாநிதியின் முன்னாள் தனிப்பிரிவு அதிகாரி வெட்டிக் கொலை.. நெல்லையில் பரபரப்பு!
Author: Hariharasudhan18 March 2025, 11:10 am
நெல்லையில், தொழுகைக்குச் சென்று திரும்பிய கருணாநிதியின் முன்னாள் காவல்துறை தனிப்பிரிவு அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி: நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. இவர்
காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில், அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் தற்போது, நெல்லை டவுணில் உள்ள முர்த்திம் ஜர்கான் தர்காவில் முத்தவல்லியாக (அறங்காவலர்) செயல்பட்டு வந்துள்ளார். தர்கா அருகில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகத் தெரிகிறது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரமலான் நோன்பை துவங்கிய ஜாகிர் உசேன், இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்றுள்ளார். பின்னர், தொழுகை முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, டவுண் காட்சி மண்டபம் அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளது.

இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்த அவர் உயிரிழந்தார். தொடர்ந்து, அந்த வழியாக வந்தவர்களில் ஒருவர் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் கீதா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
ஆனால், உடலை அங்கிருந்து எடுக்க ஜாகிர் உசேன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தகராறு காரணமாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் கொலைச் சம்பவம் நடந்திருக்காது என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததால், உடல் உடற்கூறுப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.66 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உச்சம்!
மேலும், இது தொடர்பாக திருநெல்வேலி டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், காட்சி மண்டபம் அருகே பிரதான சாலையில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக, ஜாகிர் உசேன் பிஜிலி மற்றும் அதே பகுதியைச் சார்ந்த இஸ்லாமியப் பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவர் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கு இடப்பிரச்னை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.